1. மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
2. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
3. மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
4. செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
5. பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
6. பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
7. தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
8. ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
9. பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10. மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
11. மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
13. மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
14. வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
15. சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
16. கட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.