1 நாளாகமம் 26:11-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.

12. காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,

13. தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும், பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

14. கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

15. ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,

16. சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.

17. கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,

18. வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.

19. கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.

20. மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.

21. லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,

22. யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

23. அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

24. மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.

1 நாளாகமம் 26